Wednesday, 1 May 2013


என்னத்த சொல்ல...

குப்பை உண்ணும் மான்கள்
(நாயைக் கூட சமாளித்துவிடலாம்…. ஆனால்…)




நான் ஏ.எல். முதலி இரண்டாம் வீதி, தமிழ்நாடு வீட்டு வசதிவாரியக் குடியிருப்புப் பகுதி (TNHB), வேளச்சேரி என்ற முகவரியுடைய வீட்டிற்குக் குடிவந்து ஏறக்குறைய 6 ஆண்டுகள் கடந்துவிட்டன.

பணி நிமித்தமாக வீட்டிற்குத் திரும்பும் நேரம் இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டால்…
பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்றே ஒரு வித பயத்துடன்தான் வீடு திரும்புவேன்.

அதற்கு இரு முக்கிய காரணங்கள்.

காரணம்-1:

அனைவரும் அறிந்த பொதுவான காரணம்தான்...
நாய்கள்  தொல்லை.... (சுமார் 20-30 நாய்கள்)

காரணம்-2:

மான்கள் தொல்லை.

இதனைப் பற்றி பல நண்பர்களிடம் கூறியபொழுதும் பலரும் நான் பொய் கூறுவதாகவே எண்ணுவதுண்டு…

அது அவர்கள் முகத்தில் தெரியும் அல்ட்சியப் புன்னகை மூலம் வெளிப்படும்…

ஆனால் நானும் அவர்களிடம் மேற்கொண்டு விவாதிப்பதில்லை…

ஒன்றை மட்டும் வினவுவது உண்டு….

ராஜ் பவன் சுவர் முடியுமிடத்தில், வேளச்சேரி பிரதான சாலையில் “மான்கள் குறுக்கிடும் இடம், மெதுவாகச் செல்லவும்” என ஓர் பலகையைக் கண்டுள்ளீர்களா என்பதே அது…

நாய்களை “தோத்தோ”அல்லது “ச்ச்ச்ச்ச“ என்று உச்சுக்கொட்டி அழைக்கலாம்… “ச்சூ ச்சூ” என்று கூறி விரட்டலாம் என்பதுவரை மட்டுமே அறிந்த எனக்கு…

மான்களை என்ன கூறி விரட்டுவது என்பது இதுவரை விளங்கவில்லை…

பகல் நேரத்தில் சாதுவாக அழகாகத் தோன்றும் மான்கள் இரவு நேரத்தில் கோபமுடன் துரத்துகையில் பயமேற்படுத்துவது சகஜமே…

இல்லை இது நேர்வது  எனக்குமட்டும்தானா என்று தெரியவில்லை…

என்னில் எழும் பய உணர்வு அலைகளால் ஏற்படும் விளைவா என்பதும் எனக்குத் தெரியவில்லை…

ஒன்றோ இரண்டோ என்றால் கூட பரவாயில்லை…. 15 முதல் 20 வரையிலான எண்ணிக்கையில்…

ராஜ்பவன் என்ற வனப்பகுதியில் இல்லாத எதனைத் தேடி ஊருக்குள் வந்து..
இந்த குப்பைகளுக்குள் கண்டு உண்கின்றன என்பதுதான் எனது வியப்பு இன்றுவரை…

வீட்டில் நல்ல உணவிருப்பினும்...
அரைவேக்காடாய் இருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் தேடி உண்ணும் வழக்கம்  நம்மிடமிருந்து அவற்றிற்கும் தொற்றிவிட்டதோ என்னவோ…

தெரியவில்லை…

கோழி (முட்டை அடைகாக்கும் சமயம்), நாய், தற்பொழுது மான் இவ்ற்றைக் கண்டெல்லாம் நான் பயப்படவேண்டியுள்ளது…

அதுதான் நகைச்சுவையே…

எது எப்படியாயினும் இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டால் வீடு திரும்புகையில் ஏற்படும் பயம் மட்டும் அகலவில்லை…

என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார்

No comments:

Post a Comment