Wednesday, 10 April 2013

மாதவிடாய் – ஆவணப்படம் ஒரு பார்வை (நன்றி: www.aranthai.com )


இது எனது நண்பன் www.aranthai.com - இல் எழுதிய கட்டுரை....


மிகவும் முக்கியமான மாத்விடாய் என்ற இத்திரைப்படம் அனைவரிடமும் சென்றடைய வேண்டும் என்ற சீரிய நோக்கமுடன் இக்கட்டுரையைப் பகிர்ந்துகொள்கிறேன்...

நன்றி:  www.aranthai.com &  திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு, அறந்தாங்கி.



மாதவிடாய் – ஆவணப்படம் ஒரு பார்வை

திரைப்பார்வை & கட்டுரையாக்கம் : Dr. S.தெட்சிணாமூர்த்தி, மருத்துவ அலுவலர்,
                                 திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,
                                 அறந்தாங்கி. www.aranthai.com

இயக்கம்: திருமதி. கீதா இளங்கோவன்
தயாரிப்பு: திரு. இளங்கோவன்

“மாதவிடாய்  - இது ஆண்களுக்கான பெண்களின் படமல்ல...
மனித குலத்திற்கேயான பெண்களின் படம்...
சத்யஜித்ரே, அகிரா குரோசேவா, பாலா இவர்களின் படைப்புகளை
வானவில், அருவி ஆகியவற்றோடு ஒப்பிட்டால்... 
“மாதவிடாய் என்ற இந்த ஆவணப்படமானது காற்று, நீர் போல
மனிதனின் அத்தியாவசியத்தேவை...
 உலகப் பொருளாதாரம், உலகப்போர்கள், உலகத் தலைவர்கள், தீவிரவாதம்,
காதல், குடும்ப உறவுகள் பற்றி பல ஆயிரக்கணக்கான திரைப்படங்கள்,
குறும்படங்கள் வந்திருந்தாலும், தாயாக, சகோதரியாக, மனைவியாக,
தோழியாக நம் வாழ்வின் பல பக்கங்களை தன் தாய்மையாலும், தோழமையாலும்
உயிர்ப்பாக வைத்திருக்கும், நம் உயிரின் சக ஜீவன்களான பெண்களின் மிக
முக்கியமான ஒர் இயற்கை நிகழ்வை இதுநாள்வரை நாம் கண்டுகொள்ளத் தவறி,
மாபெரும் தவறை இழைத்துவிட்டோமோ என்று நம் மனதை
உலுக்கிப் போட வைத்திருக்கிறது இந்த “மாதவிடாய்....

“மாசா மாச ரத்தப் போக்கு ஏலேலம்படி ஏலோ
மாதவிடாய் ஆனதுவே ஏலேலம்படி ஏலோ
தீட்டு தீட்டு என்று சொல்லி ஏலேலம்படி ஏலோ
ஒதுக்கி வச்சு ஒடுக்குனாங்க ஏலேலம்படி ஏலோ
என்று தொடங்கும் அந்த கிராமியக் கணீர்க் குரலே
இந்த 38 நிமிட திரைபடத்தை ஒரே வரியில்
விளக்கிவிடுகிறது...

முதலில் பாமர மக்கள் தொடங்கி பாலபாரதி அவர்கள் வரை பெண்களின்
மாதவிடாய் பற்றிய புரிதலை பதிவு செய்யும் ஆவணப் படம்,
அடுத்து அது ஓர் உடலில் இயல்பாகநிகழக்கூடிய ஒர் நிகழ்வுதான் என்பதை
மருத்துவர்கள் மூலம் பாமரனுக்கும் புரியவக்கும் செயலை மிகக் கச்சிதமாக்ச்
செய்கிறது....

மாதவிடாய்க் காலங்களில் இச்சமூகம் பெண்களுக்கு என்னவெல்லாம்
செய்வதன்மூலம் ஒர் பெண் இந்நிகழ்வை ஓர் இயல்பான நிகழ்வாய்
எடுத்துக்கொள்வாள் என்பதற்கான வழிகளையும் மிகத் தெளிவாக
விளக்குகிறது.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் இவற்றிலெல்லாம் மிகவும் பின்தங்கிய
அஸ்ஸாமில், ஒரு கோவிலில் மாதவிடாயை ஓர் தெய்வீக நிகழ்வாக
வழிபடுகிறார்கள் என்று ஆச்சரியப்படுத்தும் “மாதவிடாய்”...
மிகவும் முன்னெறிய மாநிலமென்று மார் தட்டிக்கொள்ளும் நமது
தமிழகத்தின் ஓர் கிராமத்தில் தனியாக ஓர் அறையே கட்டிவைத்து
ஒதுக்கி வைத்துள்ளதைத் தெரியப்படுத்தி அதிர்ச்சி அளிக்கவும்
தவறவில்லை...
 இது ஓர் குறும்படம் என்பது அளவில் மட்டும்தான்....
மற்றபடி ஓர் பெரும்படமாக சமூகத்தின் மற்ற அவலங்களுக்கும்
சாட்டையடி கொடுக்கவும் தவறவில்லை....

ஆண்டாண்டு காலங்களாய் தலித்துகள் மட்டுமே துப்புறவுப் பணியைச்
செய்ய்ம்படி ஈடுபட வைத்துள்ள சமூகத்தின் சாதீயக்கொடுமையைச்
சுட்டிகாட்டுகிறது...
 ‘மாற்றுத்திறனாளிகள் பொது இடங்களில் எப்படி இயற்கை
உபாதைகளைக் கழிப்பார்கள்? அதற்கான ஏற்பாடுகளை ஏன் இன்னும்
நாம் மேற்கொள்ளவில்லை? என்ற கேள்விகளை வேதனையோடு
வைக்கிறது இந்த “மாத்விடாய்.

முதலில் பெண்களுக்கே மாதவிடாய் என்பது அருவறுக்கத்தக்க
அசிங்கமான விஷயமல்ல என்பதை அழுத்தந்திருத்தமாக தெளிய வைத்து...

முத்லில் "இது பெண்களுக்கான பெண்களின் படம்" என்பதையும்....

தம் உயிரின் பாதியான பெண்களின் மிக நுட்பமான ஓர் இயற்கை
நிகழ்வை ஆண்கள் இதுவரை சரியாக உணர்ந்துகொள்ளவே இல்லை
என்று அவர்களுக்கு அன்பாய் உணர்த்தி,
இது ஆண்களுக்கான பெண்களின் படம் என்பதையும்...

“மாதவிடாய் நிகழ்வு இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட
வேண்டுமென்றால் பெண்களுக்கு உளவியல் ரீதியாக உறுதுணையாக
இருப்பதோடு, பொது இடங்களில் கழிவறைகளில சானிட்டரி நாப்கின்களை
(Sanitary Napkins) அப்புறப்படுத்துவதற்கான வசதிகளை ஓர் சமூகம்
செய்து தரவேண்டும் என்ற தீர்வை முன்வைப்பதில்,
“இது சமூகத்திற்கான பெண்களின்படம்” என்பதையும் நிரூபிக்கிறது
இந்த “மாதவிடாய்”....


“ஒரு சிறு பொறிதான் காட்டையே அழிக்கும் என்பார்கள்...
 திருமதி. கீதா இளங்கோவன் அவர்களின் இந்த “மாதவிடாய் என்ற பெயர் கொண்ட
இச்சிறு பொறி, மாதவிடாய் பற்றிய சமூகத்தில் நிகழும் மூடநம்பிக்கைக் காட்டினை
அழிக்கவேண்டுமென்றால் சமூக நலன்பால் காதல் கொண்ட நாம் அனைவரும்
இந்தப் பொறியை (இதிரைப்பட DVD-ஐவீடுதோறும், தெருக்கள்தோறும்,
தேசந்தோறும் எடுத்துச் செல்வதே... 
அந்த மாபெரும் படைப்பாளிக்கு நாம் செலுத்தும் மரியாதை மட்டுமல்ல...
நம்மைச் சுமந்த பெண் குலத்திற்கேநாம் செய்யவேண்டிய சமூகக் கடமையும் கூட....
 “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா – கவிமணி.
மாதவம் செய்து பிறந்த அந்த பெண்களின் மிக முக்கியமான உடலியல் நிகழ்வு
பற்றிய சமூக விழிப்புணர்வுக்கு “மாதவிடாய் என்ற இத்திரைப்படம் ஓர் “மாவரம்”. 
கால்ங்காலத்திற்குமான ஓர் ஆவணப்படத்தினை – ஓர் சமூகப் பொறியை படைத்த
திருமதி. கீதா இளங்கோவன் அவர்கள் தலையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்...
பெரியாரைப் போல.... 

எடுத்துக்கொண்ட “கரு” சிதைந்துவிடாமல்... அதனை நல்ல முறையில் சுகப்பிரசவமாக்கித் தந்த ஒளிப்பதிவாளர் “ஆஷிமா செனாய்ஒலிப்பதிவாளர் “ஆக்ருதி ராவ் மற்றும்
பட்த்தொகுப்பாளர் “பாபு” ஆகிய அனைவரையும் பாராட்டுவது மிகவும் அவசிய்மான ஒன்று..

தயாரிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் தானுண்டு தனது ரயிலுண்டு
என வாளாவிருந்துவிடாமல், தன்சக தர்மினியின் உழைப்பிற்கு உறுதுணையாய்
இருந்தமைக்குக் கண்டிப்பாகப் பாராட்டப்படவேண்டியவராகிறார்.

திருமதி. கீதா இளங்கோவன் அவர்கள்...
காலங்காலமாய் பேச மறுக்கப்பட்ட
ஓர் இஸ்லாமிய சகோதரியைப் பேச வைத்திருக்கிறார்...
ஓர் மாற்றுத் திறனாளிப் பெண்ணைப் பேச வைத்திருக்கிறார்...
ஓர் குக்கிராமத்தில் வசிக்கும் பெண்ணையும் பேச வைத்திருக்கிறார்...

இனி உரக்கப் பேசவேண்டியது நம் சமூகம் மட்டுமே......

Dr. S.தெட்சினாமூர்த்தி,
மருத்துவ அலுவலர்,
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,
திருப்புனவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம்.
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,அறந்தாங்கி. www.aranthai.com






No comments:

Post a Comment